புதுடில்லி: ராஜஸ்தான் அணி குறித்து தவறாக விமர்சித்த டில்லி டேர் டெவில்ஸ் அணி கேப்டன் காம்பிருக்கு, ஐ.பி.எல்., நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி கடந்த 31ம் தேதி நடந்தது. இதில் டில்லி அணி வெற்றி பெற்றது. அப்போது இதன் கேப்டன் காம்பிர் கூறுகையில்,""என்னைப் பொறுத்தவரையில் ராஜஸ்தான் அணி ஒன்றும், மிரட்டல் அணி அல்ல. யூசுப் பதான் மட்டும் தான் அஞ்சத்தக்க வீரர். மற்றவர்கள் சாதாரண வீரர்கள் தான். அவர்கள் குறித்து பயப்படத் தேவையில்லை,'' என்றார்.
ஆனால் இது குறித்து ராஜஸ்தான் அணியின் சக உரிமையாளர் ஷில்பா ஷெட்டி கூறுகையில்,"" எங்கள் அணி கடந்த 2008ல் சாம்பியன் பட்டம் வென்றது. வீரர்கள் வியக்கத்தக்க திறமை கொண்டவர்கள்,'' என்றார்.
இதனிடையே காம்பிரின் கருத்து ஐ.பி.எல்., விதி 1 ஐ மீறியதாகும். இதற்கு குறைந்தபட்ச அபராதத்துடன் கண்டனம் அல்லது போட்டிக்கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இதுகுறித்து ஐ.பி.எல்., நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில்,"" போட்டி, வீரர் அணி நிர்வாகம் அல்லது அம்பயர்கள் குறித்து தேவையற்ற விமர்சனம் செய்வது தவறு. இதன் படி காம்பிர் பிரிவு 2.1.7ன் படி விதி 1ஐ மீறி குற்றம் செய்துள்ளார்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காம்பிர் ஆதரவு:
இதனிடையே மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில், தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வரும், பஞ்சாப் வீரர் யுவராஜ் சிங் (8 போட்டி 131 ரன்கள்) குறித்து காம்பிர் கூறுகையில்,"" யுவராஜ் மீது எப்போதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் தற்போது இவர் பார்மில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இவர் மீண்டு வரலாம். நான், யுவராஜ் அல்லது யாராக இருந்தாலும், சிறப்பாக மீண்டு வர சிறிது காலம் தேவைப்படும். இதே யுவராஜ் இந்திய அணிக்காக, தனி ஆளாக இருந்து போட்டிகளை வென்று தந்தவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார்.
Labels: latest news
Post a Comment